search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதங்களை கடந்து மனிதநேயம் -  இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம்
    X

    மதங்களை கடந்து மனிதநேயம் - இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம்

    இடுக்கி அருகே, கனமழையால் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது இறந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #KeralaFlood
    இடுக்கி:

    இடுக்கி அருகே, கனமழையால் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது இறந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதங்களை கடந்து மனிதநேயம் மலர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கேரள மாநிலத்தில் சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



    அந்த வகையில் இடுக்கி மாவட்டம் சித்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிலும் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த முகாமில் தங்கியிருந்த மூணாறு அருகே 2-ம் மைல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். மழைவெள்ளம் காரணமாக அவரது உடலை புதைக்க இடம் கிடைக்காமல் அவருடைய உறவினர்கள் தவித்தனர்.

    இந்தநிலையில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்காக கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் ஷின்டோ என்பவர் வந்தார்.

    அப்போது சுப்பிரமணியனுக்கு இறுதி சடங்கு நடத்தவும், உடலை அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஷின்டோ விஜயபுரம் கிறிஸ்தவ ஆலய உயர் குழுவிடம் தெரிவித்தார். இதையொட்டி சுப்பிரமணியனின் உடலை இறுதி சடங்கு செய்து அந்த ஆலய வளாகத்தில் புதைக்க இடம் ஒதுக்க அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து சுப்பிரமணியனின் உடல் கிறிஸ்தவ ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. பின்னர் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் இறுதி சடங்கு நடத்தி அங்கேயே உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #KeralaFlood #Tamilnews 
    Next Story
    ×