search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காங்., ஆம் ஆத்மி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை
    X

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காங்., ஆம் ஆத்மி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை

    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை கூறுகையில்,  கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதேபோல், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

    டெல்லியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் சம்பளத்தை கேரளாவுக்கு நன்கொடையாக அளிக்கும்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், தமிழகத்தை சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரளா வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    Next Story
    ×