search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான வானிலை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற மோடி மீண்டும் கொச்சிக்கு திரும்பினார்
    X

    மோசமான வானிலை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற மோடி மீண்டும் கொச்சிக்கு திரும்பினார்

    கேரளாவின் கொச்சி பகுதியில் மீண்டும் கனமழை பெய்துவருவதால், வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பினார். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

    அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.

    மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார்.



    அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மீண்டும் கொச்சிக்கு திரும்பி தரையிறங்கியது. வானிலை சீரடைந்ததும் மோடி, வெள்ள பாதிப்புகளை பார்வையிட செல்வார் என தெரிகிறது.

    கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    Next Story
    ×