search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை
    X

    கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை

    மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர-சகோதரிகளுக்கு அனைவரும் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    Next Story
    ×