search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு
    X

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு தீவிரமாக திட்டங்கள் அமலில் உள்ளன.

    மற்ற மாநிலங்கள் எதுவும் இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒரு சில சமூகத்தினர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடிப்பதை விரும்பவில்லை. இந்த திட்டத்தை பற்றி விமர்சனமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்சிங் தலைமையில் 4 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

    2 குழந்தைகள் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஏற்கனவே இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதில், இருகுழந்தைகள் திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. ராகவ்லக்கன்பால் சர்மா இது சம்பந்தமாக தனி நபர் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.

    இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

    சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு அங்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதனால் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைந்தது. எனவே, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை விலக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×