search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
    X

    பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

    கர்நாடகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், பிரிந்த தம்பதியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா சேர்த்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. #DipakMisra
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் புதிய கோர்ட்டு வளாக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்து கொண்டு கோர்ட்டு கட்டிட வளாகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் நடந்த சிறப்பு மக்கள் கோர்ட்டு (‘ஸ்பெசல் லோக் அதாலத்’) விசாரணையில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஒரு தம்பதியின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களிடம் பேசிய பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்த கணவன்- மனைவியை அழைத்து பேசினார். அவர்களின் மனதை மாற்றி இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு 2015-ம் ஆண்டு குடும்ப நலகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இவர்களின் வழக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் கோர்ட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தம்பதியையும், அவர்களது குழந்தைகளையும் தனித்தனியே அழைத்து பேசிய நீதிபதி தீபக் மிஸ்ரா குடும்பத்தின் மதிப்பு என்ன என்பது குறித்து அவர்களிடம் விளக்கினார். கணவன்-மனைவி விவாகரத்து செய்வதால் குழந்தைகளின் எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை எடுத்துரைத்தார்.

    குழந்தைகள் நலனுக்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட தம்பதி தங்களது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழ்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதுபோன்று 5 வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெற்றிகரமாக முடித்து வைத்தார். விவகாரத்து குறித்து அவர் கூறும் போது, ‘‘இத்தகைய வழக்குகள் குடும்பத்தை பலவீனப்படுத்துகின்றன. இதன் தாக்கம் சமுதாயத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    பிரிந்து வாழும் தம்பதிகள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு மீண்டும் இணைய வேண்டும்’ என கருத்து தெரிவித்தார். #DipakMisra
    Next Story
    ×