search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா வந்த அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரசார் கருப்புகொடி காட்டி போராட்டம்
    X

    கொல்கத்தா வந்த அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரசார் கருப்புகொடி காட்டி போராட்டம்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிரசாரம் செய்வதற்காக இன்று கொல்கத்தா வந்த அமித் ஷாவுக்கு எதிராக விமான நிலையம் அருகே இளைஞர் காங்கிரசார் கருப்புகொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #AmitShah
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி, தொண்டர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் பிரசார பயணங்களில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஈடுபட்டு வருகிறார்.

    கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு என சில மாவட்டங்களின் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திய அவர் அடுத்தகட்டமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பிரசார திட்டத்தை தீட்டியுள்ளார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் சரிபாதியில் வெற்றி பெற்றே தீருவோம் என்ற சூளுரையுடன் கொல்கத்தா நகரில் இன்று தனது முதல் பிரசார கூட்டத்தை தொடங்க அமித் ஷா ஏற்பாடு செய்தார்.

    கொல்கத்தா மேயோ சாலையில் அவர் இன்று பேசும் பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளில் அமித் ஷா மற்றும் மோடி உருவங்களுடன் கூடிய பதாகைகளும், பிளெக்ஸ் போர்டுகளும், பா.ஜ.க. கொடிகளும் களைகட்டின.

    அந்த பதாகைகளுக்கு அருகாமையில் ‘அமித் ஷாவே, திரும்பிப்போ’ , ‘மேற்கு வங்காளத்துக்கு துரோகம் இழைத்த பா.ஜ.க.வை இங்கு அனுமதிக்க மாட்டோம்’ என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எதிர் பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன.


    இன்று காலை டெல்லியில் இருந்து கொல்கத்தா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தை அமித் ஷா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மேளதாளம், இசை, நடனத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    வரவேற்பை ஏற்றுகொண்டு  விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது வாசலில் கூடி இருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கருப்பு கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர்.

    அமித் ஷாவின் வாகனம் அங்கிருந்து செல்ல வழி விடாமல் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்திவைத்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் சாலையின் குறுக்கே இருந்த வாகனங்களை அகற்றி, அமித் ஷாவின் கார் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். அங்கிருந்து சென்ற அமித் ஷாவை வழி நெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்றனர். எழுச்சியான வரவேற்புக்கு இடையில் அவர் பொதுகூட்ட மேடையை சென்றடைந்தார். #AmitShah #AmitShahinkolkatta #youthCongworkers
    Next Story
    ×