search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
    X

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

    அசாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #RajnathSingh #NRC
    புதுடெல்லி :

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். இந்த, விவகாரம் குறித்து இந்திய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

    ‘சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் மீது எந்த அரசியலும் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். அசாம் மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இதை, வரைவு பட்டியல் அறிமுகம் செய்ததன் மூலம் அசாம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவையில்லாத பதற்றமும், பயமும் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக கவலைப்பட ஒன்றுமில்லை.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் இறுதியானது அல்ல. எனவே, வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh  #NRC
    Next Story
    ×