search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கெடுப்பில் தப்புவாரா இம்ரான்கான்? பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
    X

    வாக்கெடுப்பில் தப்புவாரா இம்ரான்கான்? பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

    பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக உள்ள இம்ரான்கானுக்கு புதிய தலைவலியாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    ஒரு வழியாக கூட்டணி அமைந்த நிலையில், வரும் 11-ம் தேதி இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.



    பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 137 இடங்கள் அவரின் வசம் இருப்பதால் அதில் சிக்கல் இருக்காது என கூறப்பட்டது. இந்நிலையில், தோல்வியடைந்த இரு முக்கிய கட்சிகளும் தற்போது கைகோர்த்துக்கொண்டு இம்ரானுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

    பாக். முஸ்லிம் லீக் மற்றும் பாக். மக்கள் கட்சி வசம் 107 இடங்கள் தற்போது உள்ளன. போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கூடுதலாக 30 இடங்கள் தேவை என்பதால், இந்த இடத்திலும் சிறிய கட்சிகளின் தயவை இரு கட்சிகளும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சாத்தியமாகாது என உறுதியாக கூற முடியும் என்றாலும், இம்ரான்கான் பக்கம் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் பக்கம் கைகோர்க்கும் நிகழ்வும் நடக்கலாம். இதனால், வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை இம்ரான்கானுக்கு தூக்கம் இருக்காது.



    சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்தலாம் என்ற திட்டமும் இம்ரான்கானின் மனதில் உள்ளது. எனினும், தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    பிரதமராக இம்ரான்கான் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடலாம். இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது போக போக தெரியவரும்.

    ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் என்பது யாரும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால் அந்நாட்டு அரசியல் சூழல் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×