search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்
    X

    பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்

    கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #BJPMLA #Prakashraj

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பசனகவுடா பாட்டீல் யாத்னா.

    இவர் ஏற்கனவே மத்திய மந்திரியாகவும் இருந்து உள்ளார். இவர் விஜயபுரா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:-

    நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளும், முற்போக்குவாதிகளும் தேசவிரோதிகள். இந்த நாட்டில் அறிவு ஜீவிகள், நாம் செலுத்தும் வரியில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள்.

    பின் நம்முடைய நாட்டுக்கு எதிராகவே கோ‌ஷங்களை எழுப்புகிறார்கள். இது போன்ற மனிதர்களிடம் இருந்து தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது.

    நான் மட்டும் உள்துறை மந்திரியாக இருந்திருந்தால் இந்த அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்வதற்கு உத்தர விடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது-

    மோட்டார் வாய் வைத்துள்ள முட்டாள் யாத்னா. உங்களால் அறிவு சலவை செய்யமுடியாது அறிவுஜீவிகளையும், முற்போக்குவாதிகளையும் உங்களை போன்றவர்கள் இப்படித்தான் செய்கிறீர்கள்.

    ஹிட்லர், கடாபி, பின்லேடன் போன்றோர் மண்ணோடு மண்ணாக போனதை இந்த உலகம் பார்த்திருக்கிறது. பிரதமர் மோடி முதலில் தங்களின் கட்சியின் உறுப்பினர்களின் வாயை மூடச் சொல்ல வேண்டும். அல்லது தொடர்ந்து மவுனமாக இருக்க சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #BJPMLA #Prakashraj

    Next Story
    ×