search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்தது - மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி தகவல்
    X

    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்தது - மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி தகவல்

    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #SwissBank #IndianDeposit #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    ஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017-ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.

    இந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.

    இதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.

    2013-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014-ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015-ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017-ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.

    அவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.

    சுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.

    இது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SwissBank #IndianDeposit #PiyushGoyal #Tamilnews
    Next Story
    ×