search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடுகளை பாதுகாக்க சிங்கங்களுடன் சண்டை போட்ட தொழிலாளி
    X

    ஆடுகளை பாதுகாக்க சிங்கங்களுடன் சண்டை போட்ட தொழிலாளி

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
    ஆமதாபாத்:

    குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

    இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.

    எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Shepherd #Lion #Goats  #tamilnews 
    Next Story
    ×