search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணைக்கு அனுமதி கேட்க தமிழக தலைவர்களுடன் சந்திப்பு - குமாரசாமி அறிவிப்பு
    X

    மேகதாது அணைக்கு அனுமதி கேட்க தமிழக தலைவர்களுடன் சந்திப்பு - குமாரசாமி அறிவிப்பு

    மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். #Kumaraswamy #MekedatuDam
    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன.

    இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கை சரியாக திறந்து விடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    மழை அதிகமாக பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

    இந்த அணையை 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட உள்ளனர். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரியதாக இருக்கும்.

    பெரிய அணையான கிருஷ்ணராஜசாகரில் 45 டி.எம்.சி. தேக்கப்படுகிறது. மேகதாது அணையை 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் வகையில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் மேகதாது ஆணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுவிடும் என்று தமிழகம் அச்சத்தில் உள்ளது. ஏற்கனவே உள்ள அணைகளில் இருந்தே சரியாக தண்ணீர் திறப்பது இல்லை. புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்ற பயம் தமிழகத்தில் இருக்கிறது.

    இதன் காரணமாக மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நடத்த முடியாமல் கர்நாடகா உள்ளது.



    தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை இன்று நிரம்புகிறது. சுமார் 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படும். மேட்டூருக்கு பிறகு காவிரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு அணை இல்லை. இதனால் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. அணை நிரம்ப போகிறது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது ஆணை பொருத்தமாக இருக்கும். அவ்வாறு அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும்.

    இதற்காக நான் சென்னை சென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு எந்த நேரத்தில் தண்ணீர் வழங்கும் பிக்சட் டெபாசிட் போல இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    இயற்கை இன்னும் கை கொடுத்தால் அதிக தண்ணீரை திறந்து விடுவோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும். மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MekedatuDam
    Next Story
    ×