search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு
    X

    வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. #GreenTribunal #Vedantha #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.



    தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவிற்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



    இதற்கிடையே ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரர்களாக இணைத்து கொள்வதற்காக வைகோ இடைக்கால மனு தாக்கல்  செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக வரும் 30-ம் தேதி தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  #GreenTribunal #Vedantha #Sterlite
    Next Story
    ×