search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
    X

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase #CBI
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் 2ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கான பங்குகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.


    இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

    ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×