search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரம்பரிய விளையாட்டுகளை மக்கள் மறந்து விடக்கூடாது: பிரதமர் மோடி பேச்சு
    X

    பாரம்பரிய விளையாட்டுகளை மக்கள் மறந்து விடக்கூடாது: பிரதமர் மோடி பேச்சு

    பாரம்பரிய விளையாட்டுகளை மக்கள் மறந்துவிடக்கூடாது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். #Modi #TraditionalSports
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் ‘மன் கீ பாத்’(மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் பேசும்போது கூறியதாவது:-

    மனதின் குரல், உரையின் போது ஒவ்வொரு முறையும் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பற்றி நான் பேசி வருகிறேன். நாம் மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியாக இருப்பது அனைத்துவித வளர்ச்சிக்கும் முக்கியமானது ஆகும். அந்த வகையில் இந்திய மக்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் (பிட் இந்தியா) என்கிற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது என் இதயத்திற்கு இதம் அளிக்கிறது.

    மக்கள் தங்களின் உடற்பயிற்சி வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ஒருவருக்கொருவர் சவால் விடுத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு எனக்கு சாவால் விடுத்து இருக்கிறார். நான் அவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன். இதுபோன்ற சவால்கள் நம்மை நாமே உடல் உறுதியோடு வைத்துக்கொள்ள உதவுவதோடு, மற்றவர்களையும் உடல் உறுதியை ஏற்படுத்திக்கொள்ள ஊக்குப்படுத்துகிறன என நான் நம்புகிறேன்.

    இந்த பிரசாரத்தில் நான் கூறுவது, “நாம் எந்த அளவுக்கு விளையாடுகிறோமே, அதை விட அதிகமாக மற்றவர்களை விளையாடுவதற்கு ஊக்குவிக்கிறோம்” என்பதுதான். இந்திய மக்கள் அனைவரும் உடல் உறுதியோடு இருந்தால், இந்தியா உறுதியாக இருக்கும்.

    அதே சமயம் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் பல நம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கிறது என்பதை எண்ணுகிற போது என் மனம் கவலை அடைகிறது. ‘கிட்டிப்புல்’ ‘கோ கோ’ ‘கோலி’ ‘பம்பரம்’ போன்ற எண்ணற்ற விளையாட்டுகள் நம்மிடம் இருந்து மறைந்து வருகின்றன.

    இதன் மூலம் விளையாட்டுகள் மட்டும் அல்ல, நம்முடைய அருமையான குழந்தை பருவத்தையும் இழக்க நேரிடும். இந்த குறையை போக்க இன்றைய பள்ளிக்கூடங்கள், குடியிருப்பு பகுதிகள், இளைஞர் சபைகள் போன்றவை பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளிப்பது முக்கிய தேவையாக உள்ளது.

    நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை அவற்றுக்கே உரிய விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளுடன் விளையாட வேண்டும். அப்படி விளையாடுவதை வீடியோவாக பதிவு செய்து, வெளியிட வேண்டும். பாரம்பரிய விளையாட்டு ‘அனிமேஷன்’ படங்களையும் உருவாக்கலாம். அவற்றை நமது புதிய தலைமுறையினர் வினோதமாக பார்ப்பார்கள். பின்னர் அவர்களும் விளையாடுவார்கள், வளர்ச்சியடைவார்கள்.

    விளையாட்டு என்பது, வெறும் விளையாட்டு அல்ல. அவை நமக்கு வாழ்க்கையின் மதிப்புகளை கற்று தருகிறது. இலக்கை நிர்ணயம் செய்தல், உறுதியான முடிவுகளை எடுப்பது, சேர்ந்து செயல்படுதல் பற்றிய உணர்வை வெளிப்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது போன்ற அரிய குணங்களை விளையாட்டுகளில் இருந்து பெற முடிகிறது. மேலும் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வயது ஒரு தடையல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறபோது தலைமுறை இடைவெளி என்பது மாயமாகிறது. எனவே மக்கள் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்துவிடக்கூடாது.

    இந்திய கடற்படையை சேர்ந்த பெண்கள் குழு, ‘ஐ.என்.எஸ்.வி. தாரினி’ கப்பலில் 250 நாட்களுக்கு மேலாக பயணம் செய்து உலகம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறார்கள். இது போன்ற பல சாகசங்கள் நிகழ்த்தப்பட வேண்டும். சாகசத்தின் உணர்வை அனைவரும் அறிய வேண்டும். வளர்ச்சி என்பது சாகசம் என்னும் கருவில் இருந்தே பிறக்கிறது.

    உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ந் தேதியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடுமையான வெயில், அளவில்லாத மழை, வெள்ளம் மற்றும் அதிகமான குளிரால் பாதிக்கப்படும்போது புவி வெப்பமயமாதலைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தை பற்றியும் பேசுகிறோம். எனினும், இதுபோன்ற வெறும் பேச்சால் மட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கைச் சூழலை பராமரிக்கவும் தேவையான அக்கறை வேண்டும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேட்டை ஒழிப்பதை இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் பிரதான நோக்கமாகும். எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும், பாலிதீனையும் மக்கள் பயன்படுத்த வேண்டாம்.

    இன்று(அதாவது நேற்று) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள். ஜவகர்லால் நேருவுக்கு வணக்கம். இந்த நாள் மேலும் ஒருவரோடு தொடர்புடையது, அவர்தான் வினாயக் தாமோதர் சாவர்க்கர். சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் கவிதை, புரட்சி இரண்டையும் கைக்கொண்டு பயணித்தவர். சமூக அரசியலில் இந்துத்துவாவை புகுத்திய ஒரே தலைவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். அவருக்கு என்னுடைய தாழ்வான வணக்கம்.

    இன்னும் சில தினங்களில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனிதமான பண்டிகை நாட்டு மக்களிடையேயான இணக்கத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.  #Modi #TraditionalSports
    Next Story
    ×