search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை மாயம் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு விசாரணை
    X

    நகை மாயம் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு விசாரணை

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது கடந்த சில நாட்களாக எழுந்து வரும் நகை மாயம் மற்றும் சர்ச்சை குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தான அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். #ChandrababuNaidu #tirupatitemple

    திருமலை:

    திருப்பதி முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், கடந்த சில நாட்களாக தேவஸ்தானத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மாயமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனிவாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் லட்டு தயாரிப்பு கூடம் தோண்டப்பட்டு பழங்கால ஆபரண நகைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவருகிறார்.

    இது சம்பந்தமாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து நகை மாயம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த புகாருக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மறுப்பு தெரிவித்து விளக்க மளித்தார்.

    இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவிடம் நேற்று விசாரணை நடத்தி, உண்மை நிலையைக் கேட்டறிந்தார்.

    மடப்பள்ளி செப்பனிடும் பணிகள், ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்து ஆபரண விவரம், வைரக்கல் சேதமடைந்த விவரம், அர்ச்சகர் ஓய்வுபெறும் வயது உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விளக்கமளித்தனர். விளக்கங்களைக் கேட்ட அவர், உண்மை நிலையை பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    இது குறித்து அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிதிமுறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் கோவிலுக்குள் உள்ள பழமைவாய்ந்த வகுல மாதா சமையற்கூடத்தில் சுவர், தரைகள் தவிர்த்து சமைப்பதற்கு வசதியாகவும், தூய்மையாக பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    300 தங்க டாலர் காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.ஐ.டி. விசாரணை நடந்தது.

    இதில், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் கிடைத்தது.

    மேலும், தேவஸ்த்தனத்தில் பல கோடி முறைகேடு நடந்ததாகவும் சி.பிஐ. விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தள்ளது. இதேபோல், அர்ச்சகர்களிடையே ஏற்பட்டுள்ள விவாதம், ரமணதீட்சிதலு குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது என்றார். #ChandrababuNaidu #tirupatitemple

    Next Story
    ×