search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம்.
    X
    திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம்.

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #TirupatiTemple #Tirupati
    திருமலை:

    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.

    பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.

    கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.

    திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது.

    தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு கூறிய தாவது:-

    திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.

    கடந்த 3-ந் தேதி இம்முறை முழுமையாக அமலுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 308 தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதைப் பயன்படுத்தி, 4 லட்சத்து 2 ஆயிரத்து 11 பேர் மட்டுமே ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், 57 மணி நேரத்துக்கு பின் தரிசனம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    எனவே ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.

    பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்றார்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 46 ஆயிரத்து 940 பேர் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். #TirupatiTemple #Tirupati
    Next Story
    ×