search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு - மத்திய மந்திரி
    X

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு - மத்திய மந்திரி

    விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியதுறை மந்திரி கூறியுள்ளார். #Petrol #Diesel #OilMinistry

    புதுடெல்லி:

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முன்பு மத்திய அரசு நிர்ணயித்து வந்தது. தற்போது எண்ணை நிறுவனங்கள் தினசரி விலையை நிர்ணயிக்கின்றனர்.

    இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வரலாறு காணாத வகையில் விலை அதிகரித்தது. டெல்லியில் நேற்று லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.76.24 ஆக இருந்தது. டீசல் லிட்டருக்கு ரூ.26 காசு உயர்ந்து ரூ.67.57-க்கு விற்றது.

    அதே நேரத்தில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.49 ஆகவும், டீசல் ரூ71.59 ஆகவும் உள்ளது. இந்த விலையேற்றம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய பெட்ரோலியதுறை மந்திரி தர்மேந்திர பிரதான் புவனே ஸ்வரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்து விட்டன. வெனிசுலாவில் அரசியல் ஸ்திர தன்மை நிலவுகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    இத்தகைய காரணங்களால் கடந்த வாரம் பெட்ரோலியம் விலை பேரலுக்கு 80 டாலர் உயர்ந்து விட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்களில் வாட் அல்லது மற்ற வரிகளும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

    எனவே மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை நீக்கி விட்டு ஜி.எஸ்.டி.யினை கொண்டு வர வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2014 நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரை மத்திய அரசு 9 தடவை கலால் வரியை உயர்த்தியுள்ளது. குருடாயில் விலை குறைந்து இருந்த நேரத்திலும் கூட 2017 ஆகஸ்டு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே தான் இருந்தது.

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் ஏப்ரல் 24-ந் தேதிக்கு பிறகு தான் உயர்ந்தது. ஒரு பேரல் 78-84 டாலராக இருந்தது. மே 14-ந் தேதி அது 84-97 டாலராக அதிகரித்துள்ளது.

    கர்நாடகாவில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவி வந்தது. மைனாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா அங்கு ஆட்சி அமைத்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வீழ்ந்தது. அதுவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #Petrol #Diesel #OilMinistry

    Next Story
    ×