search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழலின் ஆணிவேர்கள் வலுவடைந்துவிட்டன - சோனியா காந்தி
    X

    மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழலின் ஆணிவேர்கள் வலுவடைந்துவிட்டன - சோனியா காந்தி

    ஊழலின் ஆணிவேர்கள் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் வலுவடைந்துவிட்டன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். #SoniaGandhi #JanAkroshRally

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று டெல்லியில் ‘ஜன் ஆக்ரோஷ்’ என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனி காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள்.

    அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

    மோடியின் ஆட்சியில் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வேதனைக்கும், பாதிப்புக்கும் ஆளாகி இருக்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் ஏராளமான வாக்குறுதிகளை மோடியும், பா.ஜ.க.வும் அள்ளிக்கொடுத்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதை மறந்துவிட்டனர்.

    இதுவரை பார்த்திராத வகையில், சமூகத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் தாக்கப்படுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு மிகவும் கொந்தளிப்பான சூழலில் இருக்கிறது.

    மிகவும் மோசமான காலகட்டத்தை நோக்கி நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இந்த அரசுக்கு எதிராகப் போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் சேர்ந்து நாட்டின் ஜனநாயக அமைப்புகளை சிதைத்து வருகின்றன. ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மோடி, அதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது, நானும் ஊழல் செய்யமாட்டேன், ஊழல் செய்யவும் விடமாட்டேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியில்தான் ஊழலின் ஆனிவேர்கள் வலுவடைந்து இருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. சிறுகுழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை.

    ஆனால், சிறுமிகளையும், பெண்களையும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு பாதுகாக்கிறது. இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், இன்னும் இளைஞர்கள் வேலையின்மையால் துன்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துவிட்டார்.

    பொய்களும், நேர்மையின்மையும் தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சியில் நிறைந்து இருக்கிறது. யாரெல்லாம் அரசின் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் நசுக்கப்படுகிறார்கள், அல்லது அரசின் பார்வையால் எரிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.  #SoniaGandhi #JanAkroshRally #tamilnews
    Next Story
    ×