search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்., பா.ஜக. கண்டனம்
    X

    சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்., பா.ஜக. கண்டனம்

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க தவறிய மத்திய அரசை எதிர்த்து முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொள்ள உள்ள உண்ணாவிரதத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்., பா.ஜ.க. கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    அமராவதி:

    தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014 அன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்தார்.  

    நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    இதனைக்கண்டித்து, சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கினர்.

    மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர்  தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்து வருகிறார்.



    அந்த வகையில், வரும் ஏப்ரல் 20-ம் தனது பிறந்தநாளன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து அன்றைய நாள் முழுவதும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்தை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க விமர்சித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க எம்.பி ஹரிபாபு, “சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதம் கடும் கண்டனத்திற்கு உரியது. பாராளுமன்ற முடக்கத்தை கண்டித்து பிரதமர் மோடி சமீபத்தில் உண்ணவிரதம் இருந்தார். ஆனாலும், அவர் தனது வழக்கமான கடமையை மேற்கொண்டார். ஆனால், தனது பிறந்தநாளன்று உண்ணாவிரதம் அறிவித்துள்ள சந்திரபாபு நாயுடு தனது போராட்டம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும். மத்திய அரசு ஆந்திராவுக்கு என்றுமே துரோகம் செய்யாது” என கூறியுள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ராம்பாபு கூறுகையில், “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் சந்திரபாபு நாயுடு இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இவ்விவகாரத்தில் பல யூ டர்ன்களை அவர் அடித்துள்ளார். இதுவும் அது போல ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார். #TamilNews
    Next Story
    ×