search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்- பா.ஜ.க.வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் மூன்றாவது அணி - சந்திரசேகர ராவ் டெல்லி பயணம்
    X

    காங்கிரஸ்- பா.ஜ.க.வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் மூன்றாவது அணி - சந்திரசேகர ராவ் டெல்லி பயணம்

    காங்கிரஸ்- பா.ஜ.க.வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் மூன்றாவது அணியை ஏற்படுத்துவது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரும் 3-ம் தேதி டெல்லி செல்கிறார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்த யோசனைக்கு ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தொடங்கப்பட்ட ஆண்டுதினம் வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது மூன்றாவது அணியை சந்திரசேகர ராவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் வேலைகளை சந்திரசேகர ராவ் விரைவுப்படுத்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து, கடந்த 19-ம் தேதி கொல்கத்தா நகருக்கு சென்ற சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அரசியல் களத்தில் மூன்றாவது அணியை ஏற்படுத்துவது தொடர்பாக தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வரும் 3-ம் தேதி சந்திரசேகர ராவ் டெல்லி செல்கிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு புதிய உறுப்பினர்களை அனுப்பும் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி பயணத்தின்போது தனது கட்சி எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சந்திரசேகர ராவ் இடதுசாரி உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். #Tamilnews
    Next Story
    ×