search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சனையில், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையில் அமளி நீடிப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மாநிலங்களவையில் சர்வதேச தண்ணீர் தினத்திற்கான குறிப்பை வாசித்து அவை நடவடிக்கையை தொடங்கினார் அவைத்தலைவர்.

    அவர் குறிப்பை வாசித்து முடித்ததும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கையில் இருந்து எழுந்து முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் பதாகைகளுடன் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இதேபேன்று உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×