search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி மோசடி: பஞ்சாப் நேசனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளரை கைது செய்தது சி.பி.ஐ.
    X

    நிரவ் மோடி மோசடி: பஞ்சாப் நேசனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளரை கைது செய்தது சி.பி.ஐ.

    தொழிலதிபர் நிரவ் மோடி மீதான மோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேசனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
    மும்பை:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.280 கோடி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சி.பி.ஐ.யால் தேடப்படும் நகைக்கடை அதிபர் நிரவ் மோடி (வயது 46) வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் 31-ந்தேதி சி.பி.ஐ. முதலில் வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அதாவது கடந்த 13-ந்தேதி மேலும் ரூ.11,400 கோடி அளவு மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக நிரவ் மோடி மீது வங்கி நிர்வாகம் 2 புகார்களை அளித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மெகா மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில்,  நிரவ் மோடிக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 5100 கோடி மதிப்புள்ள வைர நகைகளை கைப்பற்றி உள்ளனர்.



    நிரவ் மோடியின் மோசடிக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், பஞ்சாப் நேசனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டியை (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்) சி.பி.ஐ.  இன்று கைது செய்துள்ளது. இதேபோல் வங்கி அதிகாரி மனோஜ் காரத் மற்றும்  நிரவ் மோடி குழும நிறுவனங்களுக்கு கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரி ஹேமந்த் பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மூவரும் மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். #tamilnews
    Next Story
    ×