search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்தும்: ராகுல் காந்தி
    X

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்தும்: ராகுல் காந்தி

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்தும், இந்த வரியின் உச்சவரம்பு 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் கடந்த 4 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார்.

    கடைசி நாளான நேற்று அவர் கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். கலபுரகியில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-



    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். அதை எளிமைப்படுத்துவோம். இதில் எங்களின் நிலைப்பாடு மிக தெளிவாக உள்ளது. தற்போதைய 5 வகை வரிக்கு பதிலாக, ஒரே வகையான வரியை நிர்ணயம் செய்ய முயற்சி செய்வோம்.

    ஒரு சீரான நிலையில் வரி உச்சவரம்பை நிர்ணயம் செய்வோம். இந்த திட்டத்தில் நிலவும் குழப்பங்கள் அனைத்தையும் நீக்குவோம். நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் வகையில் விவரங்கள் எங்களிடம் வந்தால் அதுபற்றி பாராளுமன்ற கூட்டத்தில் பிரச்சினை கிளப்புவோம்.

    இந்த ஜி.எஸ்.டி. விஷயத்தில் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதுதான் காங்கிரசின் நோக்கம். இது தற்போது பிரச்சினையில் உள்ளது. ஒரே வரியை நிர்ணயித்து, ஏழைகளும், சாமானியர்களும் அதிகமாக பயன்படுத்தும் பொருட் களை இந்த ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் இருந்து வெளியே வைக்க காங்கிரஸ் விரும்புகிறது. நாடு முழுவதும் ஒரே வரி, அதுவும் 18 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படும். இது தான் எங்களின் ஜி.எஸ்.டி.

    இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் நீண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் 5 வகையாக வரியை நிர்ணயிக்க நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இது அமலுக்கு வந்தால் பேரழிவு ஏற்படும் என்றும் நாங்கள் சொன்னோம். அதையும் மீறி அவர்கள் திட்டமிட்டது போலவே இந்த ஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்தனர். அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நீங்களே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    இதுபற்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சந்தித்து பேசினார். 5 வகை வரி முறையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறினார். சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்துங்கள், 130 கோடி மக்கள் மீது கஷ்டத்தை சுமத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார். ஆனால், ‘மோடி முடிவு செய்துவிட்டார், திட்டமிட்ட தேதியில் நள்ளிரவில் இது அமலுக்கு வரும்’ என்று அருண்ஜெட்லி கூறிவிட்டார்.

    இந்த நடைமுறை சோதனை செய்யப்படவில்லை, அதற் கான இணையதளம் சோதனை நடத்தப்படவில்லை, அதனால் முதல் மூன்று மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றும், அதன்பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்குமாறும் நாங்கள் கூறினோம்.

    இதை அவர்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாக இன்று குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #tamilnews
    Next Story
    ×