search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. அரசில் அதிக ஊழல்: கெஜ்ரிவால்
    X

    காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. அரசில் அதிக ஊழல்: கெஜ்ரிவால்

    காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் அதிகமாக இருக்கிறது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதன் 5-ம் ஆண்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

    இதில் கட்சித் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் ஜி.எஸ்.டி. வரி பண மதிப்பிழப்பு ஆகியவற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

    2012-ம் ஆண்டு ஊழலை எதிர்த்து தான் இந்த கட்சியை தொடங்கினோம். இதன் மூலம் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள நாம் எந்த ஊழலுக்கும் முறை கேட்டுக்கும் இடம் தராமல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. அதாவது காங்கிரஸ் ஆட்சியை விட பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் அதிகமாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஊழல் கட்சியாக உருவெடுத்துள்ளது.



    இப்போது குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. இதை இந்த நாடே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த நேரத்தில் குஜராத் மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அங்குள்ள தொகுதிகளில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அவருக்கு ஒட்டளித்து பாரதிய ஜனதாவை தோற்கடியுங்கள்.

    ஆம்ஆத்மி வேட்பாளரோ, அல்லது மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளரோ பாரதிய ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் சக்தி யாருக்கு உள்ளது என்பதை கண்டறிந்து அவருக்கு ஓட்டு போடுங்கள். பாரதிய ஜனதா வேட்பாளருக்கு மட்டும் ஒரு போதும் ஓட்டு போட்டு விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×