search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையத்தில் உப்பு சப்பில்லாத வாதங்களை தினகரன் முன்வைக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார்
    X

    தேர்தல் ஆணையத்தில் உப்பு சப்பில்லாத வாதங்களை தினகரன் முன்வைக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

    தேர்தல் ஆணையத்தில் உப்புசப்பில்லாத வாதங்களை டிடிவி தினகரன் முன்வைத்து வழக்கை இழுத்தடிக்க முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க.வை கைப்பற்ற ஓபிஎஸ்-இபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியினரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில், தங்களுக்கு உள்ள ஆதரவை நிரூபிக்கும் ஆவணங்கள், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.



    டெல்லியில் நேற்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பி.எஸ். - எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். இன்றும் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி நிர்வாகிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    இன்று இறுதி முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தில் உப்புசப்பில்லாத வாதங்களை டிடிவி தினகரன் முன்வைத்து வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார். தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு கட்சியையும்  இரட்டை இலை சின்னத்தையும் முடக்க சதி செய்கிறார்.



    கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறிய அவர் இப்போது உபத்திரவம் செய்கிறார். சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாருக்குமே அரசியல் எதிர்காலம் இல்லை.  கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நவநீதகிருஷ்ணன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×