search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் கூட்டம்: கர்நாடகம் சார்பில் 5 பேர் பங்கேற்பு
    X

    காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் கூட்டம்: கர்நாடகம் சார்பில் 5 பேர் பங்கேற்பு

    காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் 5 பேர் பங்கேற்கின்றனர்.
    பெங்களூர்:

    காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக- கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் பெங்களூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறுகையில் “காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக மட்டுமே நீர் உள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது

    டெல்லியில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் 5 பேர் பங்கேற்கின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகள் நாளைய கூட்டத்தில் தெரிவிக்கப்படும். தண்ணீர் திறக்க மறுப்பது குறித்து மத்திய மந்திரி உமா பாரதியிடம் தெரிவிக்கப்படும். டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். அதுவரை தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் கருத்து அடுத்த விசாரணையில் மாறலாம்" என்றார்.
    Next Story
    ×