search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
    • ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

    அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    • அச்சுறுத்தலில் நீதித்துறை- அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல் தலைப்பில் கடிதம்.
    • காங்கிரஸ் தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும், எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் தலையிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், வக்கீல்கள் கடிதத்தை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அத்துடன், தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ப்பணிப்பு உணர்வுள்ள நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.

    ஆனால், தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றபடி நாடு மீதான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து நழுவிக்கொள்கிறது.

    எனவே, 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக,

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு 'அச்சுறுத்தலில் நீதித்துறை- அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல் உள்பட 600 வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    2018-2019 ஆண்டு காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது சில சுயநல சக்திகள் கோர்ட்டுகள் மீது செல்வாக்கு செலுத்தவும், அழுத்தம் தரவும் முயன்றனர். தவறான கட்டுக்கதைகளை பரப்ப முயன்றனர்.

    அதேபோல், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இத்தகைய சுயநல சக்திகள் தங்களது அச்சுறுத்தல் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அரசியல் வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் அரசியல் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்களது நிர்பந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிகிறது. இத்தகைய தந்திரங்கள் நமது கோர்ட்டுகளை பாதிப்பதுடன், நமது ஜனநாயக கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

    இந்த வக்கீல்கள், தங்கள் வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முயற்சிக்கின்றனர். நீதிபதிகள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்கள் எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்புகிறார்கள்.

    இவர்கள் பகலில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள். இரவில், ஊடகம் மூலமாக நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்கள்.

    கடந்த காலம்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாகவும் தவறான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அதன்மூலம், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக கோர்ட்டுகளை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு கோர்ட்டுகள் மீதுள்ள நம்பிக்கையை அசைத்து பார்க்கும் வகையில் அவர்களது கருத்துகள் இருக்கின்றன.

    அத்துடன், நம் நாட்டு கோர்ட்டுகளை சட்டத்தின் ஆட்சி நடக்காத நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு கீழே இறங்குகிறார்கள். சாதகமான தீர்ப்பு என்றால் அதை புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் அதை அவமதிப்பதுமாக இருக்கின்றனர்.

    ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு வலிமையாக நிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து கோர்ட்டுகளை பாதுகாக்க வேண்டும்.

    மவுனமாக இருப்பதோ, எதுவும் செய்யாமல் இருப்பதோ இந்த நபர்களுக்கு கூடுதல் வலிமை அளிப்பதாக ஆகிவிடும். கண்ணியமான மவுனம் காக்க வேண்டிய நேரம் இதுவல்ல. கடந்த சில ஆண்டுகளாக, இம்முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவும் அடிக்கடி நடக்கின்றன. தலைமை நீதிபதியின் தலைமை, கடினமான தருணங்களில் மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஐந்து முறை முக்தார் அன்சாரி எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார்.
    • 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. இவர் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 63 வயதான முக்தார் அன்சாரி மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மாரடைப்பால் முக்தார் அன்சாரி உயிர் பிரிந்ததாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சகோதரும் காசிப்பூர் தொகுதி எம்.பி.யுமான அப்சல் அன்சாரி, முக்தார் அன்சாரி ஜெயிலில் மெதுவாக கொல்லும் விசம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.

    ஐந்து முறை முக்தாரி அன்சார் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். ஐந்து முறையும் மவு சதார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவரது மறைவையொட்டி பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் இருந்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு நீதிமன்றங்களால் 8 வழங்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட 66 பேர் கொண்ட கேங்ஸ்டர் பட்டியலில் இவரது பெயரும் அடங்கும்.

    ஜெயிலில் அவர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிய நிலைக்கு சென்றார். 9 டாக்டர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மவு-வை சொந்த இடமாக கொண்ட முக்தார் அன்சாரிக்கு காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    • இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம்.
    • இந்த சோதனை போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

    தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

    இந்நிலையில், இதன் முதல் விமானம் எல்.ஏ.5033 இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது.

    தலைமை பயிற்சி பைலட், குரூப் கேப்டன் கே.கே.வேணுகோபால் (ஓய்வு) விமானத்தை ஓட்டினார். 18 நிமிடங்கள் வானில் பறந்து வட்டமடித்து பின்னர் தரையிறக்கினார். இந்தச் சோதனையானது போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது

    ஒரே நேரத்தில் விமானத்தை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான முக்கிய மைல்கல்லை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் அடைந்திருக்கிறது.

    தேஜாஸ் எம்.கே.1ஏ விமானத்தில் மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.

    • இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
    • மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

    மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

    உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
    • பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும்.

    பெங்களூரு:

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.

    இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா இன்று இந்தியா வந்தடைந்தார்.
    • டெல்லி வந்த டிமிட்ரோ குலேபா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    புதுடெல்லி:

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    இந்நிலையில், டெல்லி வந்தடைந்த டிமிட்ரோ குலேபா ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தனது பயணத்தில் இந்திய வெளியுறவு மந்திரி மற்றும் பிறருடன் இருதரப்பு உறவுகள் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க உள்ளார்.

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் அவர் வருகை தந்துள்ளார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்

     கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்று புகார் எழுந்தது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. .

    இதனையடுத்து, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் டெல்லி இகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இதனையடுத்து கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் அவருக்கு 7 நாள் நிதிதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர்.

    அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கெஜ்ரிவால். அப்போது, இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. இருப்பினும் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். 

    ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே அமலாக்கத்துறை என்னை கைது செய்திருக்கிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் என்னை வேண்டுமென்ற அமலாக்கத்துறை சிக்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கின் விசாரணையில்,

    அமலாக்கத்துறை: "கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கு எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது" என வாதிடப்பட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால்: "ரூ.100 கோடி ஊழல் நடந்திருந்தால், அந்த ஊழலின் பணம் எங்கே போனது? உண்மையில், ED விசாரணைக்குப் பிறகுதான் இந்த ஊழல் தொடங்கியது. அமலாக்கத்துறைக்கு இரண்டு நோக்கங்கள் மட்டும் தான் உள்ளது. ஒன்று ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும். மற்றொன்று மறைமுகமாக சிலரை மிரட்டி பணம் வசூலிக்க வேண்டும்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சரத் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு ரூ.55 கோடி நிதி அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஏன் பாஜகவுக்கு நன்கொடை வழங்கவேண்டும்?

    இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டேன்.

    மணிஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்த அரவிந்த், சிசோடியா சில கோப்புகளை என் முன்னிலையில் கொடுத்ததாக கூறினார். பல அமைச்சர்கள் எனது வீட்டிற்கு வந்து ஆவணங்களைத் தருகிறார்கள். பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இது மட்டும் போதுமா?"

    வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். இது போல், நானும் இந்த ஊழலில் மோடியும், அமித் ஷாவும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால், அவர்களும் கைது செய்யப்படுவார்களா? என அவர் கேள்வியெழுப்பினார்

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதியாக, கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீட்டித்து உத்தரவிட்டது.

    • ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகினார்.
    • ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப்பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார்.

    ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    அரியானா முன்னாள் மந்திரியும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய சாவித்ரி ஜிண்டால் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    சமீபத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×