search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன:  ஓபிஎஸ் - ஈபிஎஸ்
    X

    தமிழ்நாட்டை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா அமைத்த நல்லரசு தொடரவும், அ.தி.மு.க. வின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும், தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



    பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.

    அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

    இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

    அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×