search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிமேரி கல்லூரியில் போலீசார் குவிப்பு
    X
    ராணிமேரி கல்லூரியில் போலீசார் குவிப்பு

    மத்தியில் ஆட்சியமைப்பது யார்? பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 91 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 லட்சத்து 96 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், சுமார் 10 லட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 542 தொகுதிகளிலும் சுமார் 2.70 லட்சம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சுமார் 20 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வாக்குகள் பதிவானது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி இடைதேர்தலும், ஏப்ரல் 18, மே 19-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

    7 கட்டமாக நடந்த ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஓட்டு எண்ணப்படும் லயோலா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு

    முதலில் தபால் வாக்குகள், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணப்படும். அது முடிந்ததும் 30 நிமிடங்கள் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருக்கும் வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும். அதாவது 8.30 மணிக்குத்தான் மின்னணு எந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 14 முதல் 22 மேஜைகள் வரை போடப்பட்டு ஓட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றிய தகவல் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும்.

    காலை 10 மணி அளவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய வரும். இதைத்தொடர்ந்து முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புடன் இருக்கும் வேட்பாளர்கள், கட்சி பற்றி தெரிந்துவிடும்.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 30 ஓட்டுச்சாவடிகளின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். இப்படி ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.

    இந்தியா முழுவதும் 542 தொகுதிகளிலும் 20 ஆயிரத்து 625 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டியதுள்ளது. எனவே இந்த தடவை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சொல்கிறார்கள்.

    என்றாலும் நாளை மாலை முதலே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் ஓட்டு எண்ணிக்கை வி‌ஷயத்தில் புதிய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 22 எதிர்கட்சிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளன. அந்த மனுவில், “ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எண்ணப்படுவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி முதலில் சரிபார்க்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் சரியாக இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும். முரண்பாடு இருந்தால், எந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சினை உள்ளதோ அந்த சட்டசபை பகுதிக்குரிய வாக்குகள் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி வாக்குகளை எண்ணினால் தேர்தல் முடிவை வெளியிட 3 அல்லது 4 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×