search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுக்கு வழியில் முதல்வராக மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்
    X

    குறுக்கு வழியில் முதல்வராக மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்

    குறுக்கு வழியில் முதல்வராக மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.

    அப்போது முதல்- அமைச்சராக இருந்த நான் உடனே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஒரே நாளில் 4 துறைகளிடம் அனுமதி பெற்று திரும்பினேன்.


    தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா கடந்த சில வருடங்களாக தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க.வை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. குறுக்கு வழியில் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

    பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் தி.மு.க. வினரின் அக்கிரமம் தற்போதும் தொடர்கிறது. மாமூல் கேட்கும் பழக்கம் இன்னும் அவர்களை விட்டு விலகவில்லை.

    காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் வெற்றி தேடித்தந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எப்போதும் மக்களுக்கான ஆட்சி மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க.

    திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். எஜமானர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு நல்ல தீர்ப்பை தர வேண்டும்.

    தமிழகத்தில் எந்த பகுதியிலும் சாதி, மத கலவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. புயல், பூகம்பம் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டு காலம் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் மிகை மின் மாநிலமாக மாறியது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்

    Next Story
    ×