search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா ஆட்சி என கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் - தினகரன்
    X

    ஜெயலலிதா ஆட்சி என கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் - தினகரன்

    ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார் என சூலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #TTVDinakaran
    சூலூர்:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற துரோக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கடமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும்.

    மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். வியாபாரிகளை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா வரவிடவில்லை. ஆனால் எடப்பாடி அதை ஆதரித்தார். இது ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளுக்குத் தான் வாக்களிப்போம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

    ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருடைய உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று கூறிய விஜயகாந்த் கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளனர். துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.



    எங்களை வெற்றி பெற செய்தால் சூலூர் தொகுதியில் வேளாண் உதவி மையம் அமைக்கப்படும். விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பரம்பிக்குளம்-ஆழியாறு மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 60 வயதான விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான மக்களாட்சியை அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம். உங்களது வெற்றி வேட்பாளர் சுகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    முன்னதாக கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி-புவனேஸ்வரி தம்பதியின் பெண் குழந்தைக்கு அகல்யா என்று டி.டி.வி. தினகரன் பெயர் சூட்டினார். #EdappadiPalanisamy #TTVDinakaran
    Next Story
    ×