search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
    X

    தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

    தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சராசரியாக 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் சராசரியாக 75.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெரம்பூரில் குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம்.

    ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர்நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லி இருக்கிறோம்.

    கேள்வி:- 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 73.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது 2 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதே? நிறைய இடங்களில் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இல்லாதது, பலர் தேர்தலை புறக்கணித்தது இதற்கு காரணமா?


    பதில்:- இப்போது 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதற்கு மேல் நான் கருத்து சொல்ல முடியாது.

    கே:- தர்மபுரி தொகுதி நத்தமேடு, மோட்டார் குறிச்சி 4 வாக்குச்சாவடியில் பா.ம.க. வினர் கேமராக்களை திருப்பி வைத்து, தி.மு.க. ஏஜெண்டுகளை விரட்டி விட்டு ஓட்டு போட்டார்கள். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளாரே?

    ப:- நேற்று ஒரு சில கட்சியினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இன்று செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.

    கன்னியாகுமரியில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அதற்கும் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் வந்தாலும் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

    4 தொகுதிகளுக்கு தேர்தல் பற்றிய அறிவிப்பு 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    கே:- பறக்கும்படை சோதனை இனி 4 தொகுதிகளில் மட்டும் நடத்தப்படுமா அல்லது தமிழகம் முழுக்க நடத்தப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்தப்படும். இது பற்றிய அதிகாரப்பூர்வ சிறப்பு அறிவிப்பு தேர்தல் கமி‌ஷனில் இருந்து பின்னர் வரும்.

    கே:- நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே?

    ப:- குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.

    ப:- பார்க்கலாம் இது பொதுவாக தவறுதான்.

    கே:- எத்தனை இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்?

    ப:- 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பை அரசியல் கட்சியினர் கண்காணித்துக் கொண்டே இருக்கலாம். மே 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து மின்னணு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

    கே:- பறக்கும்படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி கொடுக்கப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் எங்கெல்லாம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அங்கு ஆவணங்களை சரியாக காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரம் காட்டியவர்களுக்கு பணத்தை ஏற்கனவே திருப்பி கொடுத்துள்ளோம். தொடர்ந்து பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    வருமானத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆதாரத்தை காட்டினால் திருப்பி கொடுத்துவிடுவார்கள். அல்லது வருமானவரித்துறை சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கே:- சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எத்தனை?

    ப:- வடசென்னையில் 63.47 சதவீதமும், தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    கே:- நகரப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளதே?

    ப:- வழக்கமாக நகரப் பகுதிகளில் ஓட்டுகள் குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். நகரப்பகுதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. அதனால் கூடுதலாக ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். பொது மக்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.

    கே:- பூத் சிலிப் கொண்டு செல்லாதவர்களை பல இடங்களில் ஓட்டுபோட அனுமதிக்கவில்லையே?

    ப:- பூத்சிலிப் இல்லாமல் அடையாள அட்டை எடுத்து சென்றவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை எடுத்து செல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    Next Story
    ×