search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா மதவெறியை தூண்டி விட்டு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது- சீதராம் யெச்சூரி
    X

    பா.ஜனதா மதவெறியை தூண்டி விட்டு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது- சீதராம் யெச்சூரி

    மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

    மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

    பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.

    ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×