search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோசம் - கமல்ஹாசன்
    X

    எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோசம் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #kamalhaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் போகுமிடம் எல்லாம் மக்களின் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கும், மக்களுக்கும் சந்தோ‌ஷமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பொறுப்பு கடமையும் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதை மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

    எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிலர் பிரசாரத்தில் இருப்பதால் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அனுதினமும் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

    தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல செய்திகள் தினமும் கேட்பதால் சாதாரணமாகி விட்டது. இது சாதாரணமான செய்தி கிடையாது.

    இப்படிப்பட்ட செய்திகளை பார்த்து விட்டு எங்கள் கட்சியினர் கூட நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன் இதைச் செய்யக்கூடாது.

    அதற்குதான் நாம் வந்திருக்கிறோம். அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டியதாயிருக்கிறது.

    பொதுவாக நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அண்ணனைப் பார்த்து தம்பி கற்றுக் கொள்வது தான் நம் குடும்பங்களில் உள்ள வழக்கம் .இது ஒரு தொற்று ஆகிவிட்டது. இந்த தொற்றை பரவாமல் நாம் தடுக்க வேண்டும். எங்கள் கட்சியில் யாராவது ஆசைகாட்டி, போனால் கூட அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.

    திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம். நான் திராவிடன், நாம் எல்லோரும் திராவிடர்கள். இந்த இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட வி‌ஷயம் திராவிடம் அல்ல, எல்லோருக்கும் சொந்தமான வி‌ஷயம்தான் திராவிடம். அப்படி தான் திராவிட கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

    நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் கமி‌ஷன் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.

    சே‌ஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் கமி‌ஷன், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையை ஏவல் துறையாக மாற்ற முடியும் ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் மாறாமல் இருக்க முடியும் என்று எப்படி சொல்வது.

    ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான்.

    கோப்புப்படம்

    வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பதுக்கி வைத்திருந்த பணத்தை குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த இடத்திலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பரிந்துரைக்கிறது, வேண்டுகோள் வைக்கிறது.

    இங்கே இப்படிப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இதைவிட அதிகமாக மற்ற எதிர்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது சரியான பதில் கிடையாது. அழுக்கு அழுக்கு தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan
    Next Story
    ×