search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் போட்டியிட போவது யார்-யார்?: வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது
    X

    தமிழகம் முழுவதும் போட்டியிட போவது யார்-யார்?: வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 26-ந்தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த கால அவகாசத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,587 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் பரிசீலனை 27-ந்தேதி நடைபெற்றது. அதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற 2 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுபவர்கள், 29-ந்தேதி (இன்று) மாலை 3 மணிக்குள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், களத்தில் நிற்கப்போகும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

    எந்தெந்த தொகுதிகளில் யார்-யார்? களத்தில் நிற்கின்றனர்? எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை 3 மணிக்கு மேல் தெரியவரும். இந்த இறுதி வேட்பாளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இன்று மாலை 3 மணிக்கு மேல் சுயேச்சை வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

    சுயேச்சை வேட்பாளர்கள் பலர் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால், அதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வேட்பாளருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். தற்போது அ.ம.மு.க., வேட்பாளர்கள் அனைவருமே சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.



    அவர்கள் அனைவருக்கும், ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம், வழங்கும் அறிவுரையின் அடிப்படையில், அவர்களுக்கு சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தேர்தல் களத்தில் பிரசாரம் இன்னும் சூடு பிடிக்கும்.  #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    Next Story
    ×