search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை ஏன் மாற்றக்கூடாது?- ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி
    X

    மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை ஏன் மாற்றக்கூடாது?- ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #LSPolls #MaduraiHCBench #EC
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அந்த நாளில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி நேற்று முறையீடு செய்தார்.

    இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கிய பாரம்பரிய விழா, சித்திரை திருவிழா. இந்த விழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும்.

    எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.


    தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார்.

    அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு மதுரை சித்திரை திருவிழா மிக மிக பழமையான முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த விழா ஒருநாள் மட்டும் நடப்பது அல்ல. ஒரு வாரத்திற்கு மேல் நடத்தப்படுகிறது. பல லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரை வந்து விழாவில் கூடுகிறார்கள்.

    இந்த திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை.

    இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர்.

    மேலும் மாற்றுத்தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 14-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி விழா, தேனி கண்ணகி கோவில் விழா ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அங்கும் தேர்தல் தேதியை மாற்றலாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #LSPolls #MaduraiHCBench #EC
    Next Story
    ×