search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சத்தியமூர்த்தியின் பிறந்த நாளையொட்டி புதுக் கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பால் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை. விமர்சனம் செய்யும் போது தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு நல்லது செய்தால் அதையும் ஆதரித்து கருத்து கூறுவதில் தவறில்லை. 
    ப சிதம்பரம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ப.சிதம்பரம் பற்றி அவரது கருத்தை தெரிவித்துள்ளார் . அந்த கருத்தினால் கூட்டணிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. காங்கிரஸ் குறித்து வைகோ விமர்சனம் செய்த போது, கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின், இருவரிடமே தொலை பேசியில் பேசி சமரசம் செய்து வைத்தார். 

    மேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் நெருங்குவதற்கு முன்பே கடைமடை வரை வரத்து வாரிகளை சீர்செய்து இருக்கவேண்டும். ஆனால் அதை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டது . நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிலர் விளம்பரத்திற்காக என்னை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    சாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.

    அவனியாபுரம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக பிரிக்கிறார்கள்? என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது.

    சாதிய கட்சிகளை அதிகமாக நம்புவது பாரதீய ஜனதா. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள். சென்னை, புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது.

    மாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

    ரஜினி

    காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குகிறார்.

    இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என சந்தேகம் எழுகிறது. திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். 
    முக ஸ்டாலின்
    காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமராவதை தடுத்தது திமுக தான். அப்துல்கலாமை ஜனாதிபதியாகும் போது எதிர்த்ததும் திமுக தான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று மதுரையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    மதுரை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முப்படைகளுக்கு தனித்தனி தளபதிகள் இருந்தனர். இப்போது ஒரே தளபதி என்று மாற்றியிருப்பது இந்தியாவை பொருத்தவரை இது ஒரு அவசியமற்ற செயலாகும்.

    சில நாடுகளில் தவிர்க்க முடியாமல் ராணுவ புரட்சியால் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ராணுவத்திற்கு முப்படைகளின் தலைமைக்கு ஒரே தலைவர் என்பது அவசியமற்ற மாற்றம்.

    மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்கிறது. தற்போது ராணுவத்திலும் தலையிட்டு வருகிறது.

    நடுத்தர மக்கள் அதிகமாக உபயோகிப்பது பால். அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கு எந்தவித வழிவகையும் செய்யவில்லை.

    தமிழகத்தில் பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாநில அரசு அதிகமாக பாலின் விலையை உயர்த்துவது என்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

    ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் அந்த மாநிலம் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு அதுதான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் தலையீடு காஷ்மீர் விவகாரத்தில் இருக்கக் கூடாது என்பதும் காங்கிரசின் நிலைப்பாடு.

    சிறப்பு அந்தஸ்து 370-ஐ மாற்றக் கூடாது என்று நாங்கள் சொல்ல வர வில்லை. அப்படி மாற்றுகிற போது அந்த மாநில மக்களின் சம்மதத்தோடு மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். காஷ்மீர் மக்களின் ஆதரவோடு செய்ய வேண்டிய விசயத்தை ஆளுநர் ஆட்சி அமைத்து, காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவர்களை கைது செய்துள்ளனர். இன்னும் பலபேர் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

    மக்களுக்காக பாடுபட கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில் என்ன சீர் திருத்தத்தை செய்யப் போகிறார்கள். மத்திய அரசு அமைப்புகளால் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளாக இருக் கட்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவன வேலை வாய்ப்புக்களாக இருக் கட்டும் தமிழ்நாட்டில் இருக் கக்கூடியவர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது.

    வேறு மாநிலத்தவர்களுக்கே வேலை கிடைக்கிறது. மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பா.ஜனதா எண்ணம் பலிக்காது. பா.ஜனதாவை பாராளுமன்றத்தில் அதிகமாக விமர்சனம் செய்து பேசியவர் வைகோ.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிக்பாஸ் முடிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத் தான் முதல்வர் லண்டன் செல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு எங்களை குறை கூறுவது தான் வேலை.

    மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத் தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார்.

    பா.ஜனதாவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தேசியத்தின் பார்வையில் பா.ஜனதா எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க.வை கவர்ந்துள்ளது. தி.மு.க. பிரிவினையை தூண்டக் கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்க கூடியவர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறு எறும்புக்குக்கூட இடையூறு இருக்காது. தி.மு.க.பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர் என்கிற பட்டியலில் தி.மு.க. மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும். மாட்டினால் மாட்டியது தான்.

    எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல. திடீரென வருவார்கள் போய் விடுவார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    காஷ்மீர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் துணிச்சலான முடிவு எடுத்து இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். அது வரவேற்புக்குரியது.

    முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்களால்தான் வேலூரில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் கூறி இருக்கிறார். இது தவறு. இது போன்ற அறிவிப்புகள் அவருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்திருக்கிறது.
    ஏ.சி.சண்முகம்
    முஸ்லிம் மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கிறார்கள்.

    இஸ்லாமிய மக்கள் ஆதரித்து இருக்கிறார்கள். அதனால்தான் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று கதிர் ஆனந்தின் தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு வித்தியாசம் லட்சக்கணக்கில் இருந்தது. இந்த சாதனை வெற்றிக்கு பின்னர் 3 மாதத்திற்கு பிறகு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு கடுமையான போரை எதிர்கொண்டு வெற்றி பெற்றுது போல், 8,141 ஒற்றைப்படை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்த வெற்றிக்குறித்து அவரது தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி:- வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உங்கள் மகன் பெற்ற வெற்றியில் திருப்தியடைகிறீர்களா? இது எதிர்பார்த்த வழியில் இருந்ததா?

    பதில்:- நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தோம். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று.

    கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு பிறகு குறுகிய வெற்றி வித்தியாசத்திற்கு என்ன காரணம்?

    பதில்:- பொதுத்தேர்தலின் போது வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தால் விளைவு வேறுபட்டிருக்கும்.

    இது கேரளாவில் அட்டுகலில் பொங்கலைக் கொண்டாடுவது போன்றது. எல்லோரும் திருவிழாவில் பங்கேற்கும்போதுதான் அது பண்டிகை தோற்றத்தை அளிக்கும்.

    ஒரு நபர் பொங்கலை வழங்கும்போது, ​​அந்த உணர்வு பொதுவான பொங்கலைப் போல மகிழ்ச்சியாக இருக்காது.

    மேலும், தொகுதியில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு, அதன் கீழ் வரும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் 5 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டது.

    மாதிரி நடத்தை விதிமுறை, அரசு அறிவிப்புகள் வெளியிடுவதைத் தடைசெய்தாலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதை ஒரு தாலுகா தலைமையகமாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

    கே.வி.குப்பம் குடியாத்ததில் இருந்து 8 கி.மீ தூரத்திலும், காட்பாடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. குடியாத்தம் மற்றும் காட்பாடி ஆகிய 2 இடங்களிலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளன.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மேலும் முதலமைச்சர் மற்றொரு தாலுகாவை உருவாக்குவதாக உறுதியளித்தார்.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில், வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிப்பதாக அவர் உறுதியளித்தார்

    இந்த வாக்குறுதிகள் மாதிரி நடத்தை விதிகளை மீறும் வகையில் செய்யப்பட்டன. அவர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்கள் மனதை குழப்பினர்.

    தி.மு.க. தவறான வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் குற்றம் சாட்டினார். உண்மையில், அவரும் அவரது அமைச்சர்களும் தான் தவறான வாக்குறுதிகளை அளித்தனர்.

    கேள்வி:- தி.மு.க.வின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் பங்களித்தன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வாக்குப்பதிவு நாளில் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததும் காரணமா?

    பதில்:- பொதுத்தேர்தலில் கூட முஸ்லிம்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். எனவே காஷ்மீர் பிரச்சனைக்கும், தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இடைத்தேர்தல்களில் ஆம்பூர், குடியாத்தம் உட்பட 13 சட்டமன்ற இடங்களை நாங்கள் வென்றோம்.

    கேள்வி:- மாநிலத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கும், மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் வேட்பாளருக்கும் வாக்களிப்பது தங்களுக்கு பயனளிக்கும் என்று வாக்காளர்கள் நம்பினார்களா?

    பதில்:- அமைச்சர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று உள்ளூர் பகுதி மேம்பாட்டுக்கு வாக்குறுதிகள் அளித்தனர்.

    ஒரு பகுதியில், 8 நாட்களில் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர். அமைச்சர்களால் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டதால் பொது மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.

    கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதாக அமைச்சர் ஒருவர் உறுதியளித்தார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்ததன் மூலம் அவர்கள் வாக்காளர்களை ஏமாற்றினர்.

    கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவாக காஷ்மீர் போன்ற பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உள்ளூர் பிரச்சனைகள் குறித்து அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றார் என்பது உண்மைதானா? அதே போல் வன்னியர்கள் கதிர்ஆனந்துக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லையா?

    பதில்:- வாக்காளர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் வேறுபடுத்த நான் விரும்பவில்லை. முதலியார்கள் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்திருந்தால், முதலியார்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் அதிக வாக்குகளை பெற்றிருக்க மாட்டோம். சுமார் 40,000 முதலியார்களைக் கொண்ட குடியாத்தத்தில் அவர் எதிர்பார்த்த ஓட்டு கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது, அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல, படேல் காங்கிரஸ் தலைவர். வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது. காஷ்மீர் விவகாரத்தில் நேருவுக்கும் வல்லபாய் படேலுக்கும் ஒத்த கருத்தே இருந்தது. நேருவுக்கும் படேலுக்கும் ஒத்த கருத்து இல்லை என பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களிடையே பிரதமர் உரையாற்றியபோது காஷ்மீருக்கு எந்தெந்த சட்டம் பொருந்தும் என கூறவில்லை.

    எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு. தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர,சோழ,பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன?
    காங்கிரஸ்
    காங்கிரசில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும், கலக்கத்தையும் நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை. மதசார்பின்மை பற்றி விவாதம் எழும்போது காங்கிரசில் சலசலப்பும், கலக்கமும் தற்போது இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் இருக்கக் கூடிய ஏரிகள், குளங்கள், நீர்வழிச்சாலைகள் புனரமைக்கும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

    மதுரை மண்டலத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு காரணம் முதல்-அமைச்சர் எடுத்து வரும் திட்டங்கள் தான்.

    நீர் நிலைகளில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நிச்சயமாக அவை அகற்றப்படும். கடந்த ஆட்சியின் போது தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை உரிய காலங்களில் திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எங்களுக்கு எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லை.

    வேலூர் தொகுதி

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு கிடைத்திருப்பது உண்மையான வெற்றி அல்ல, சிறு பான்மையினரின் வழி மாற்றி கிடைத்த வெற்றி. இங்கு அ.தி.மு.க.வின் வாக்காளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியை சீமானின் நாம் தமிழர் கட்சி பதம் பார்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்த போது 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    சீமான் மிக துணிச்சலாக புதுமுகங்களை களத்தில் இறக்கினார். கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சீமான் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தனர்.

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீபலட்சுமியை சீமான் அறிவித்தார். கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் சீமான் மட்டும் தன்னம்பிக்கையுடன் தீபலட்சுமியை களம் இறக்கினார்.

    தீபலட்சுமியை ஆதரித்து அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க. - அ.தி.மு.க.வின் பிரமாண்ட பிரசாரத்திற்கு மத்தியில் அவரது பிரசாரம் எடுபடாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளார். அவரது இந்த வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தீபலட்சுமி பிரித்த வாக்குகள் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    தீபலட்சுமிக்கு கிடைத்த வாக்குகள் அ.தி.மு.க.வை மட்டுமே பதம் பார்க்கவில்லை. தி.மு.க.வையும் சேர்த்து பதம் பார்த்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உணர்ச்சி பொங்க வைக்கும் பேச்சுகள் வழக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசப்படும். தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நகர பகுதி மக்களை மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களையும் சென்று சேர்ந்துள்ளது.

    குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சீமானின் பிரசாரமும், பேச்சும் எடுபட்டுள்ளது. இதனால்தான் நாம் தமிழர் கட்சிக்கு சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

    சீமானுக்கு என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வாக்கு வங்கி உருவாகி வருவதை இது காட்டுவதாக அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியுள்ளார். இந்த வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    வேலூர் தேர்தலில் தீபலட்சுமி பெற்ற 27 ஆயிரம் வாக்குகளும் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாலாற்றகங்கரையில் அமைந்துள்ள அம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீபலட்சுமி வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் தமிழ் தேசியம் பற்றி மக்கள் மத்தியில் முழங்கியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதுபற்றி அவர் கூறுகையில், “வேலூர் தொகுதியில் வாக்களித்த மக்களின் 9,417 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். அந்த 9,417 பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால் அவர்கள் தடம் மாறி சென்று இருக்க மாட்டார்கள். எனக்கு வாக்களித்து இருப்பார்கள்” என்றார்.

    தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் நாம் தமிழர் கட்சியினர் வேலூருக்கு வந்து தீபலட்சுமிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தனர். அது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    சீமான் 10 கூட்டங்களில் பேசினார். அந்த 10 கூட்டங்களிலும் அவர் இலவச கல்வி, இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பேசினார். இதுவும் இளைஞர்களை கவர்ந்தது. இதனால்தான் தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகளை மக்கள் வழங்கி உள்ளனர்.

    வேலூர் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்தில் கூட எந்த வாக்காளருக்கும் லஞ்சமாக பணம் கொடுக்கவில்லை.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர். அவர்களது நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்து உள்ளது.

    இந்த 27 ஆயிரம் வாக்குகளும் அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் தொகுதியில் மட்டுமின்றி மற்ற 37 (நீலகிரியில் போட்டியிடவில்லை) பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரித்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி பிரமிக்க வைத்தனர்.

    திருவள்ளூர் தொகுதியில் வெற்றிசெல்வி 57,840 வாக்குகள், வடசென்னையில் காளியம்மாள் 60,454 வாக்குகள், தென்சென்னையில் செரீன் 50,222 வாக்குகள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 53,027 வாக்குகள், காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனி 62,721 வாக்குகள், கோவையில் கல்யாணசுந்தரம் 60,400 வாக்குகள், திண்டுக்கல்லில் மன்சூர்அலிகான் 54,851 வாக்குகள், திருச்சியில் வினோத் 65,286 வாக்குகள்.

    பெரம்பலூரில் சாந்தி 53,545 வாக்குகள், நாகப்பட்டினத்தில் மாலதி 50,091 வாக்குகள், தஞ்சையில் கிருஷ்ணகுமார் 56,707 வாக்குகள், சிவகங்கையில் சக்திபிரியா 69,176 வாக்குகள், விருதுநகரில் அருள்மொழி தேவன் 52,591 வாக்குகள், தென்காசியில் மதிவாணன் 58,855 வாக்குகள் பெற்று பிரமிக்க வைத்து இருந்தனர்.

    இப்படி நாம் தமிழர் கட்சியினர் பிரித்த வாக்குகள் அனைத்துமே தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளையும் பதம் பார்த்தன.

    டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பிரித்ததை விட சீமானின் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    வேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.
    வேலூர் தேர்தல் முடிவு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

    நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை கட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் இருந்து வருகிறது. எந்த தேர்தலையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதே நேரத்தில் வெற்றி-தோல்வியை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியை செய்து வருகிறோம்.

    வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை நியாயமான வாக்குகளாக கருதுகிறோம். எப்போதுமே தமிழகத்தை பொறுத்தவரையில் தேர்தல் களத்தில் பணமே பிரதானமாக உள்ளது. இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகிய இரண்டுமே பணப்பட்டுவாடா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    ஆனால் நாங்கள் மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். அந்த வகையில் தான் வேலூர் பாராளுமன்ற தேர்தலையும் எதிர்கொண்டோம். நாம் தமிழர் கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் பிரச்சினை. ஆனால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் நிற்போம். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யாமல் அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்களிப்பார்கள்.

    மாற்றம் என்பது ஒரே நாளில் வந்து விடாது. தமிழகத்தில் நிச்சயம் ஒரு நாள் அரசியல் மாற்றம் ஏற்படும். அதனை நாம் தமிழர் கட்சியே உருவாக்கும்.

    கேள்வி:- வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது ஏன்?

    பதில்:- அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே வேண்டாம் என்கிற மனநிலை தான் காரணம். தி.மு.க. வந்துவிடக்கூடாது என்ற ஒரு பிரிவினரும் அ.தி.மு.க. வந்துவிடக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டு போட்டதன் விளைவாகத்தான் இவ்வளவு இழுபறி ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    கே:- அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி மட்டும் களத்தில் இருந்தும் ஓட்டுக்கள் குறைவாக கிடைத்தது ஏன்?

    ப:- நான் ஏற்கனவே கூறியபடி 2 கட்சிகளும் வேண்டாம் என்ற மனநிலையில் மாறி மாறி விழுந்த ஓட்டுகளால் நாம் தமிழர்கள் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்து இருக்கலாம். இருப்பினும் நாம் தமிழர் கட்சி எப்போதும் மக்களை நம்பி களத்தில் நிற்கும். குளத்திடம் கோபித்துக்கொண்டு குளிக்காமல் சென்றால் யாருக்கு நஷ்டம் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் தேர்தல் தோல்விக்காக யாரிடமும் நாம் தமிழர் கட்சி கோபித்து கொள்ளாது. போர்க்களத்தில் வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம். எனவே மாற்றத்தை நோக்கி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பயணிக்கும். அதில் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×