search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

    தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    • எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
    • 25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி.

    கோவை:

    தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதமராக பணியாற்றி வருகிறார்.

    50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்துள்ளது. அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் வேற்றுமையை விதைப்பது காங்கிரஸ் தான்.

    பிரதமர் மோடிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    பெண்ணுரிமை என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை.

    ஆனால், இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல விசாவில் தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான். அதேபோன்று முஸ்லிம் பெண்கள் பாராட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு தான் கொண்டு வந்தது.

    எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஏதோ இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் போலவும், பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக இருப்பது போல சித்தரித்து இந்த தேர்தலை முன்னெடுத்து செல்ல முயல்கிறார்கள்.

    ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்து பறிபோய் விடக்கூடாது என்று தான் பிரதமர் சொன்னார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 1 கோடி ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்த அரசு ரேஷன் கார்டு வரை கொடுத்துள்ளது. நம் நாட்டு மக்களின் சொத்துக்கள் பறி போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் சொன்னாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

    ஆனால் காங்கிரஸ் இதனை தேர்தலுக்காக திசை திருப்ப முயற்சிக்கிறது.

    25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு 45 லட்சம் உயிர்களை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு.

    இப்படி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் வேண்டும் என்றே பாரதிய ஜனதா மீது குறை கூறுகிறார்கள். நாட்டின் முக்கியமான தேர்தல் நடக்கும்போது ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.

    வட மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.

    ஒருவேளை இந்தி எதிர்ப்பு பிரச்சனை ஏற்படுமோ என்ற காரணத்தினால் இருக்கலாமோ? அல்லது அங்கு சென்றால் எந்த பிரயோஜனம் இருக்காது என்பதாலும் இருக்க வாய்ப்புள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரச்சனைகளையும் மீறி பா.ஜ.க வெற்றி பெறும்.

    வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    சென்னையில் நான் போட்டியிட்ட தொகுதியில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்காளர்களின் வாக்குகள் சில மாதங்களில் காணாமல் போய் விட்டது.

    மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுப்பவர்களை பார்த்து தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று கூறினால், நீங்கள் தான் தோல்வி பயத்தில் அமைதியாக உள்ளீர்கள் என்று சொல்வோம். ஏனென்றால் எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நிச்சயமாக நான் உள்பட பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    மாநில உரிமையை பறித்து விட்டார்கள், அதனை மீட்க நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் இங்கு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? அவர்களது கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.

    இவர்கள் அமைதி காப்பதன் மூலம் இந்த சம்பவங்கள் வேண்டும் என்றே நடந்து போல தோன்றுகிறது. இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரிசியிலும் அடிதடி நடக்கிறது. அரசியலிலும் அடிதடி நடக்கிறது. ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி விற்கிறார்கள்.

    தமிழகத்தில் கஞ்சா, போதை கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதனையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமரை மட்டுமே குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தக்கூடாது.

    தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் என்றும் உள்ளது. பத்மவிபூஷன் விருது படிப்படியாக ஒவ்வொருவருக்காக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    #WATCH | Coimbatore, Tamil Nadu: On PM Modi's statement, BJP candidate from South Chennai, Tamilisai Soundararajan says, "...First of all, our Prime Minister's schemes are of inclusive growth. Sabka Saath Sabka Vikas; nobody has been excluded...For the past 50 years, almost half… pic.twitter.com/oTqbdQlI9T

    • தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு.
    • கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தற்போதுள்ள வெப்ப நிலை நீடிக்கும். கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். 5 அல்லது 10 நிமிடங்கள்தான் மழை பெய்யும். கன்னியாகுமரி, சேலம், ஏற்காடு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு. கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் 36, 38 டிகிரி செல்சியஸ் அளவிலேயே உள்ளது. மே முதல் வாரத்தில் இருந்து மேற்கு திசை காற்று, தரைக்காற்று கடலோர மாவட்டங்களுக்கு வரக்கூடும் என்பதால் வெப்பம் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். காவிரி டெல்டா பகுதிகள் உள்பட வடதமிழகம், தென் தமிழக பகுதியிலும் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும். சுட்டெரிக்கும் வெயில் தாக்கக்கூடும். எனவே வரும் நாட்களில் வெப்ப அலை அதிகம் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    • மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே.நகரில் செல்வ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

    மேலும் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கேட்டு மாரிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து கொண்டு இருந்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஏதோ ஒரு பொருளை வீசுவது போன்றும், தீ வைப்பது போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் கண்டக்டர் இருக்கை நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.

    அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

    ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம் - தன்பாத் மற்றும் ஈரோடு - தன்பாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாரந்திர சிறப்பு ரெயில் (06065) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06066) மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து வரும் 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06064) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 2 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா ஆகிய வழித்தடத்தில் செல்லும்.

    அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானதீபம். இவரது மனைவி குலோடில்டா (வயது 67). குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதில் மூன்றாவது மகன் ஜெயனுக்கு(38) திருமணமாகி மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெயன் அப்பகுதியில் உள்ள பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் குடிபோதையில் தாய் குலோடில்டாவிடம் அவர் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயன் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதி ஆகிய 3 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் குலோடில்டா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த தூத்துக்குடி நகர போலீஸ் உதவி கமிஷனர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குலோடில்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தாயை கொலை செய்த ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு செய்த தந்தையை 14 வயது மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் நேற்று குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    மதுரை:

    தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட்டு பிறப்பித்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. அவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.

    பின்னர், தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநில எல்லையை ஒட்டியுள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில், கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இங்கு வரட்டுப்பள்ளம் அணை, செக் போஸ்ட் மற்றும் பர்கூர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாகன சோதனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டம் ஹனூர் தொடவாத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த பாபு மகன் மாதேவன் (வயது 32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை மண்டல துணை வட்டாட்சியர் ராஜ சேகரிடம் ஒப்படைத்தனர்.

    • தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தை தி.மு.க. தலைமை பாராட்டி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரசார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் தி.மு.க.வை வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்த பிரசாரத்தில் காண முடிந்தது. தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். கருணாநிதியை போலவே, தொண்டர்களுடன் நம் உதயா (உதயநிதி ஸ்டாலின்) கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக்கொண்டார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8 ஆயிரத்து 465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரசார முனைகளில் 3 ஆயிரத்து 726 நிமிடங்கள் பேசியுள்ளார்.

    ஒவ்வொரு பிரசார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடி பிரசாரம் செய்துள்ளார். இந்த பிரசார கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும், தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய அரசு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்து, பிரசாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. அந்த ஒற்றைச் செங்கல் பிரசாரம் அந்த தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

    சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டும் எந்தவித தடுப்புமின்றி பிரசாரம் மேற்கொண்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மக்கள் சந்திப்பும், பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டு பதில்கள் தந்த விதமும் இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும். தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாக திகழும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×