search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
    X

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் விஜயலட்சுமி தகவல்

    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் வரையிலான உற்பத்தி, ரூ.3 லட்சம் வரையிலான சேவை மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க 25 சதவீதமாக அதிக பட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம ்மானியத்துடன் வங்கி கடன் பெற ஏதுவாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் திட்டம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 வரையும் சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும். திட்டத்தின் பங்கு தொகையாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் பொது பிரிவினரும், 5 சதவீதம் சிறப்பு பிரிவினரும் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்திற்கு 2019- 20-ம் ஆண்டிற்கு இலக்கீடாக 75 நபர்கள் ரூ.45 லட்சம் என நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியுடைய, ஆர்வமுடைய படித்த வேலை வாய்ப்பற்ற தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 2 விண்ணப்ப நகல்களுடன் குடும்ப அட்டை, கல்வி சான்று, சாதிச்சான்று, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை மற்றும் உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையம், அரியலூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×