search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    தஞ்சையில் இன்று திமுக எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தஞ்சையில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டியின் கீழ் இங்குள்ள அகழி கரையோரம் உள்ள வீடுகளை இடித்து பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பூங்கா அமைப்பதற்காக பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும். உங்களுக்கு பிள்ளையார்பட்டியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நோட்டீசு வழங்கினர். ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி பட தெரிவித்தனர்.

    இதனை அறிந்த தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் இன்று காலை தஞ்சை மேலஅலங்கத்துக்கு சென்றார். அப்போது திடீரென அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நீலமேகம் எம்.எல்.ஏ. வை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள், எம்.எல்.ஏ. வை சூழ்ந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் ; ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நகரை அழகுப்படுத்தலாம். ஆனால் வீடுகளை எப்படி காலி செய்ய சொல்லலாம்? நாங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம். இங்குதான் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.

    மேலும் முறையாக வீட்டு வரி, குடிநீர், மின்சார கட்டணம் கட்டி வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இதை கேட்ட எம்.எல்.ஏ., ‘‘உங்களுக்கு உறுதுணையாக நானும், எம்.பி. பழனிமாணிக்கம் இருப்போம். உங்களது வீடுகளை இடிக்க விட மாட்டோம்’ என்று உறுதிபட கூறினார்.

    பின்னர் நீலமேகம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மேலஅலங்கத்தில் 100 ஆண்டுகயாக வாழ்ந்து வரும் மக்களின் வீடுகளை இடித்து பூங்கா அமைக்கும் திட்டத்தை கண்டிக்கிறேன். அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆளுங்கட்சியினர் ஊழல் செய்துள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். மக்களை அழிக்கும் எந்த திட்டத்தையும் தஞ்சைக்கு கொண்டு வர விட மாட்டோம். மக்களை பாதுகாப்பதே தி.மு.க.வின் கொள்கை ஆகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு கடைசி வரை பாதுகாப்பாக இருப்பேன். அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன். வீடுகளை காலி செய்ய விட மாட்டோம். பூங்காவை வேறு மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×