search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது
    X

    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது

    பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பதால் காற்றாலை மூலம் சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவக்காற்று வீசிவருவதால் காற்றலை மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யவும் மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூரியசக்தி மூலமும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காற்றாலைகளின் மின் உற்பத்தி காரணமாக மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி நடப்பாண்டில் இந்த மாத தொடக்கத்திலேயே தொடங்கி படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது 3 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தியாகிறது.

    அகில இந்திய அளவில் அனைத்து வகை மின்சார உற்பத்தி கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.80 என்பது ரூ.3.10 ஆக குறைந்துவிட்டது. இதற்கு காற்றாலை உள்ளிட்ட அனைத்து வகை மின்உற்பத்தியும் அதிகரித்திருப்பது தான் காரணமாகும்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு வரை காற்றாலை மின்சாரம் ஆண்டுக்கு 12,500 மில்லியன் யூனிட் வரை உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இது 11 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக குறைந்தது. நடப்பாண்டு இம்மாத தொடக்கத்திலேயே உற்பத்தி தொடங்கிவிட்டதால் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தற்போது மாலை நேரத்தில் தான் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. வருகிற நாட்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும். அனைத்து காற்றாலைகளும் முழுமையாக இயங்கினால் மின் உற்பத்தி சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, கயத்தாறு மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் 8,152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

    காற்றாலை மின் உற்பத்தி மே மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை இருக்கும். பொதுவாக காற்றாலைகள் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின் உற்பத்தி முழு அளவை எட்டும்போது அனல் மின்நிலையங்களை பராமரிப்பு பணிக்காக சுழற்சி முறையில் நிறுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

    தற்போது பகலில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால் சூரியசக்தி மூலம் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை. உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×