search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி
    X

    கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி

    தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த ஜனவரி மாதம் அமராவதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்கரி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது, ‘ஆண்டுதோறும் கோதாவரி நதியில் இருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கெல்லாம் கோதாவரி- கிருஷ்ணா-பென்னார்- காவிரி நதிகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி செலவாகும். இதற்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதி பெற திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 4 தென்மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.

    காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின்கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தனது டுவிட்டர் பக்கத்தில், இது தான் பா.ஜ.க. என்றும், நீங்கள்(தமிழக மக்கள்) நிராகரித்தாலும் பா.ஜ.க. தனது கடமையை செய்யும் என்றும் கூறி உள்ளது.



    மேலும், நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘நன்றி சார்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோன்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மத்திய மந்திரி நிதின்கட்கரியின் பேட்டியை பார்த்தேன். நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு நிதின்கட்கரி அளித்த பதில் எனது கண்களில் இருந்து கண்ணீரை பெருக்கெடுக்க செய்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் உங்களது பொதுவான திட்டம் என்ன என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு நிதின்கட்கரி, முதல்முறை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் இருந்த போது ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினேன். 2-வது முறை பொறுப்பேற்கும்போது நீர் வழி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம். தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது கடமையும், முதல் வேலையும் ஆகும் என்று பதில் அளித்தார்.

    என்ன அற்புதமான மனிதர் இவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டை தான் முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்த கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்க தவறிவிட்டது’ என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×