search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே பெண் எரித்துக் கொலை- போலீசார் விசாரணை
    X

    மன்னார்குடி அருகே பெண் எரித்துக் கொலை- போலீசார் விசாரணை

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. புதர் மண்டி கிடக்கும் இந்த இடத்தில் ஒரு பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. பிணம் அருகே அந்த பெண்ணின் ஒரு செருப்பு கிடந்தது.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், பெண் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை பதிவு செய்தனர்.

    மேலும் திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் சிறிதுதூரம் ஓடி ஒரு பனைமரத்தை சுற்றி வந்து நின்றது. அங்கு அந்த பெண்ணின் மற்றொரு செருப்பு கிடந்தது. பெண் கொலை செய்யப்பட்டு 2 நாளுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணை அந்த இடத்தில் கொலை செய்து விட்டு பிறகு மர்ம கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 30 முதல் 40 வயது வரை இருக்கலாம் என தெரிகிறது. எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெண்ணை எரித்து கொன்ற மர்ம கும்பல் யார்? கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    மன்னார்குடியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×