search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிராஜன் வீட்டில் சோதனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரிகள். (உள்படம்-சபரிராஜன்)
    X
    சபரிராஜன் வீட்டில் சோதனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரிகள். (உள்படம்-சபரிராஜன்)

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- சபரிராஜன் பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனித்தனி குழுவாக முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 14-ந் தேதியன்று சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அவரது வீட்டின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். சபரி ராஜன் வீட்டில் சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    அவர்கள் சபரிராஜன் வீட்டிற்குள் சென்றதும் காம்பவுண்டு கதவு மற்றும் வீட்டின் முன் பக்க கதவை பூட்டினார்கள். பின்னர் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர்.

    சபரிராஜன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்கள். திருநாவுக்கரசுக்கும், சபரி ராஜனுக்கும் எந்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. என்ன தொழில் செய்து வந்தனர்.

    சபரிராஜனுக்கு வேறு யாருடனும் பழக்கம் உள்ளதா? அவர்கள் யார்? யார்? என்றும் விசாரணை நடத்தினார்கள். 30 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையின் போது சபரிராஜன் வீட்டில் இருந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஏற்கனவே சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது கட்டமாக சோதனை நடத்தி சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற்று உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சபரி ராஜனை தொடர்ந்து சதிஷ், மணிவண்ணன், வசந்த குமார் ஆகியோரது வீட்டிற்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவதுடன் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×