search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    தஞ்சையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    தஞ்சையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). இவர்கள் 2 பேரும் கீழவாசலில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனபாலன் தனது மனைவி சாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர். தஞ்சை-வல்லம் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று இழுத்து பறித்தனர்.

    பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் செயினை இழுத்ததில் சாந்தி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுப்பற்றி தனபாலன் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற சங்கவி தாரணி என்ற இளம்பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செயினை பறித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோல் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். எனவே தஞ்சையில் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×