search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
    X

    மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

    மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுண்டிபள்ளம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து வேறு இடத்தில் உள்ள ஒரு மின் மாற்றியில் இருந்து சுண்டிபள்ளம் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் மின்னழுத்தம் குறைவு காரணமாக வேலை செய்யவில்லை.

    இதனால் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப் படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் சுண்டிபள்ளம் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலையரசன், செல்வக்குமார், வசந்த், திவாகர் மற்றும் மீன்சுருட்டி மின்சார உதவி பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×