search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்க வேண்டும்- ஜெயராமன்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்க வேண்டும்- ஜெயராமன்

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஜெயராமன் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    தமிழர் தன்மான பேரவை சார்பில் முள்ளிவாய்க்கால் பேரழிவு 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி போராட வேண்டும். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மூலம் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால் மத்திய அரசு , காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் 3 சுற்றுகளாக செயல்படுத்த போகிறார்கள். புதுச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டார். ஆனால் தமிழக அரசு தனது நிலைப்பாடு பற்றி இதுவரை தெளிவாக கூறவில்லை. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அறியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    2016-க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ்கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் ஓட்டுமொத்த காவிரிபடுகையும் காணாமல் போய்விடும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

    Next Story
    ×