search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுருளி அருவி கோவில் பூசாரி கொலை- குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    X

    சுருளி அருவி கோவில் பூசாரி கொலை- குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் இங்கு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிக அளவில் வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    சுருளி அருவி பகுதியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் கடந்த 3-ந் தேதி புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கொள்ளையடிக்க முயன்றனர். இதை தடுத்த பூசாரி மலையன் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சுற்றுவட்டார கிராமங்களான சுருளிப்பட்டி, கருநாக்கன்முத்தன்பட்டி, எரசை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக விசாரித்த போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    கோவிலில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த பக்கமும் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சேகரித்த பதிவுகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப்போகவில்லை.

    இதனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுருளி அருவி முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிப்டு முறையில் போலீசார் சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அருவி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×